வேளாண் பொருட்களுக்கு அத்தியாவசிய சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்களில் இருந்து வேளாண் பொருட்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 1955ம் ஆண்டில் பஞ்சம் ஏற்பட்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்ட போது கொண்டு வரப்பட்ட சட்டம் இது என்றும், இந்த சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் விவசாயிகளுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கும் என்று உணவுப் பொருள் விநியோகத்துறை அமைச்சர் ராவ்சாஹிப் பட்டேல் விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். உணவுப் பொருட்களை குளிர் பதனம் செய்து பராமரிக்கவும் இச்சட்டம் விவசாயிகளுக்கு உதவும் என்று அவர் தெரிவித்தார்.
அவையில் நடைபெற்ற விவாதத்தின்போது,நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தினர். தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் மத்திய அரசு நியாயமான காரணத்தை கூறாமல் அதனை நிராகரித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
இதனிடையே சித்த மருத்துவத்தின் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் ஏன் சித்த பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஹனுமந்தயா கேள்வி எழுப்பினார். குஜராத், கேரளம் போன்ற மாநிலங்களில் இதற்கான ஆய்வகங்கள் செயல்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.