டெல்லியில் மிகப்பெரிய கொரோனா சிறப்பு மருத்துவமனையை, துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் இன்று திறந்து வைத்தார்.
டெல்லி அரியானா எல்லையில் உள்ள சத்தர்பூரில் (Chhatarpur) இருக்கும் ராதாசாமி ஆன்மீக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில 10000 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் வரும் கொரோனா நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும்.
அறிகுறிகள் இல்லாமல் இருந்து, வீடுகளில் தனிமையில் இருக்கும் வசதி இல்லாதவர்களுக்கும் அனுமதி உண்டு. 1700 அடி நீளமும், 700 அடி அகலமும் உள்ள இந்த மருத்துவமனை 20 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் நிர்வாகத்தில் இருக்கும் இந்த மருத்துவமனையை, இந்தோ-திபெத் காவல் படையினர் மேலாண்மை செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையிலான கொரோனா மருத்துவமனைகளில் இதுவே உலகில் மிகவும் பெரியது என டெல்லி நிர்வாகம் தெரிவித்துள்ளது.