கொரோனா தொற்று பரவியதையடுத்து டெல்லியில் அமலாக்கத் துறையின் தலைமை அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மூன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், இரண்டு அலுவலகத் தொடர்புடைய ஊழியர்கள் ஆகியோருக்கு பரிசோதனையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கான் மார்க்கெட் அருகில் உள்ள லோக் நாயக் பவனில் அமைந்துள்ள அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் கட்டட வளாகம் மூடி சீல் வைக்கப்பட்டது. அலுவலகத்தில் கிருமி நாசினி மருந்து தெளித்துத் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றி ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே பணிக்கு வருகின்றனர் .வாரம் இருமுறை அலுவலகம் சுத்தம் செய்யப்படுகிறது.
ஊழியர்களிடையே சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்படுகிறது. இருந்த போதும் 15 ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 5 பேரின் முடிவுகள் பாசிட்டிவாக வந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.