அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் புயலாக உருமாற வாய்ப்புள்ளதாகவும், இதனால் கேரளா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று கிழக்கு மைய அரபிக்கடலில் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது.
இன்று அதிகாலை, கோவாவுக்கு 300 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும், குஜராத்தில் இருந்து 770 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பிற்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறினால் அதற்கு நிகர்சா என்று பெயரிடப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் மேலும் வலுவடையும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால், லட்சத் தீவுப் பகுதியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வடக்கு கேரளா, கடலோர கர்நாடகா மற்றும் கோவாவில் கனமழை முதல் அதிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலாக மாறும் பட்சத்தில் வடக்கு மகராஷ்டிரா தெற்கு குஜராத் இடையே நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, வடக்கு கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் 95 முதல் 105 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு அரபிக்கடலைச் சார்ந்துள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.