ஆரோக்ய சேது செயலியில் பாதுகாப்பு குறைபாடுகளோ, தனிப்பட்ட விவரங்களுக்கு அச்சுறுத்தலோ இல்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வடிவமைத்த ஆரோக்ய சேது செயலியை ஏராளமானோர் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த செயலியில் தனிப்பட்ட விவரங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதே கருத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எலியட் ஆல்டெர்சனும் (Elliott Alderson) தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆரோக்ய சேது செயலியில் எவ்வித பாதுகாப்பு குறைபாடும் இல்லை என விளக்கமளித்து அதனை வடிவமைத்தவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
மேலும் செயலிக்கான கட்டமைப்பை தொடர்ந்து சோதித்து மேம்படுத்தி வருவதாகவும், இதனால் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.