பெரு நாட்டில் கோமாளிகள் தினம் களைகட்டியது. நூற்றுக்கணக்கானோர் கோமாளி போன்று வேடமணிந்து, ஆடல் பாடலுடன் அணிவகுத்து வந்த காட்சி, பார்வையாளர்களை கவர்ந்தது.
ஏழைகளின் கோமாளி என்றழைக்கப்பட்ட பிரபல கலைஞர் Toni Perejil-ன் நினைவாக 1987 முதல் ஆண்டுதோறும் கோமாளிகள் தினத்தை பெரு நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில், தலைநகர் லிமாவில் பல்வேறு வண்ண உடையணிந்து வந்திருந்த நூற்றுக்கணக்கானோர், முகங்களில் வண்ண சாயங்களை பூசிக்கொண்டும், குழந்தைகளை மகிழ்விக்கும் வகையிலான கோமாளி போன்ற விக்குகளை தலையில் அணிந்தும், வீதிகளில் உலா வந்தனர்.
குழந்தைகளுடன் பேரணியைக் காண திரண்ட உள்ளூர் மக்கள் உற்சாகமாக ஆரவாரம் எழுப்பி, கோமாளிகளை வரவேற்றனர்.