கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 35 அடி ஆழ கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை, கிணற்றில் துணிச்சலாக இறங்கி 8 வயது சகோதரி காப்பாற்றினார்.
மாவேலிகரா பகுதியில் வீட்டின் முன்பு தனது இரு சகோதரிகளுடன் விளையாடி கொண்டிருந்தபோது குழந்தை யுவான் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளான்.
இதனை பார்த்த யுவானின் சகோதரிகள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். அவர்களது தாய் தடுத்தும் கேட்காத 8 வயது சிறுமி தியா பாத்திமா, தனது தம்பியை தானே காப்பாற்றுவதாகக்கூறி கிணற்றின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் குழாய் வழியாக கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த தனது தம்பியை அணைத்து தூக்கி குழாயை பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு உதவிக்கு வந்த வடமாநில தொழிலாளி ஒருவர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி குழந்தையை மீட்டு மேலே கொண்டு வந்த நிலையில், சிறுமியோ கயிற்றை பிடித்து தானாகவே மேலே ஏறி வந்துள்ளார். இதனை கேள்விபட்டு பலரும் சிறுமியை பாராட்டி பரிசு பொருட்களை வழங்கி செல்கின்றனர்.