சென்னையில் மணப்பெண்களுக்கு அலங்காரம் செய்யும் அழகு நிலையங்களை குறி வைத்து திருடிய கும்பலைச்சேர்ந்த ஒருவனை கைது செய்த போலீஸார், மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
சென்னை நொளம்பூர் எஸ்பி நகரில் டிசம்பர் 8 ஆம் தேதியன்று அழகுநிலையத்தில் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்தவர்களிடம் கத்தி முனையில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 செல்போன்கள், பெண் ஊழியர்களிடமிருந்து 3 சவரன் நகை, கல்லாவிலிருந்த 7 ஆயிரத்து 500 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
தனிப்படை அமைத்த நொளம்பூர் போலீசார், சிசிடிவி காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்து, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த 19 வயதான ஆகாஷை கைது செய்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில், அழகு நிலையங்களில் பெண்கள் தான் அதிகளவில் பணிபுரிவார்கள் என்பதால், இணையதளங்களில் விளம்பரம் செய்யும் நிலையங்களை குறிவைத்து கொள்ளையை அரங்கேற்றியதாகவும், புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கைவரிசை காட்டியிருப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.