இசையமைத்த பாடல்களை பயன்படுத்த தடைவிதிக்கக்கோரி இசை நிறுவனங்கள் மீதான இளையராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அந்நிறுவனங்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளையராஜா இசையமைத்து, 1978-80களில் வெளியான இருபது தமிழ் படங்கள், ஐந்து தெலுங்கு படங்கள் உள்ளிட்ட முப்பது படங்களின் இசை பணிகளை இந்தியன் ரெகார்டு நிறுவனம் உள்ளிட்டவை பயன்படுத்த தனி நீதிபதி முன்னதாக அனுமதி அளித்திருந்தார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த இளையராஜா, பட தயாரிப்பாளர்களுக்கு படத்தின் காப்புரிமை மட்டுமே உள்ளது என்றும் இசை பணிகளுக்கு அவர்கள், முதல் உரிமையாளர்கள் அல்ல என்றும் மனுவில் குறிபிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவிற்கு 4 வாரங்களில் இசை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.