ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது குண்டு வீசிய குற்றத்தில் எந்த அமெரிக்க வீரரும் தண்டிக்கப்பட மாட்டார் என பெண்டகன் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட பரிந்துரைகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஏற்றுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அந்த அறிக்கையில், ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை ஒப்புக் கொண்டாலும், அந்த நிகழ்வு ஒரு துன்பகரமான தவறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப்படைகள் வெளியேறிய போது, ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது கடந்த ஆகஸ்ட் மாதம் தீவிரவாதிகள் என சந்தேகப்பட்டு ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தனர்.