சென்னையில் வாகனங்களில் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் சென்றால் 'ஸ்பீடு ரேடார் கன்' என்றும் கருவியால் கண்காணிக்கப்பட்டு தானியங்கி அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வர உள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களால் விபத்துகளும் போக்குவரத்து நெரிசலும் ஒரு பக்கம் அதிகரித்து வர, அவற்றைக் குறைக்க விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன தொழில்நுட்ப கருவிகள், உபகரணங்களை போக்குவரத்து காவல் துறைக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்.
இதில் 'ஸ்பீடு ரேடார் கன்' எனும் கருவி சென்னையில் 30 இடங்களில் பொருத்தப்படுவதாகவும், மோட்டார் வாகனச் சட்டப்படி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை சராசரியாக 40 கிலோ மீட்டர் வேகமும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கிலோ மீட்டர் வேகமும் அனுமதிக்கப்பட்டவை எனவும், நிர்ணயிக்கப்பட்ட இந்த வேகத்தை கடந்தால் 'ஸ்பீட் ரேடார் கன்'னுடன் இணைக்கப்பட்டிருக்கும் ANPR கேமரா மூலம் தானியங்கி முறையில் விதி மீறிய வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார்.