சென்னையில் போதைக்கு பயன்படுத்தும் ஒருவகை வலி நிவாரணி மாத்திரைக்காக பட்டதாரி இளைஞரை கடத்திச்சென்று கொலை செய்து ஆற்றில் வீசிய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன். பிசிஏ படித்துவிட்டு ஃபாஸ்ட்ராக் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 4-ஆம் தேதி மகேஸ்வரனை அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மகேச்வரனின் தாயார் பஞ்சவர்ணம் அபிராமபுரம் காவல் நிலையத்தில் தனது மகனை கண்டுபிடித்து தரக் கோரி புகார் அளித்திருந்தார்.
இரு தினங்களுக்கு முன்பு பட்டினப்பாக்கம் அடையாறு முகத்துவாரம் அருகே மகேஸ்வரனின் சடலம கரை ஒதுங்கியது. போலீஸ் விசாரணையில் மகேஸ்வரன் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும், வலி நிவாரணி மாத்திரைகளை சட்டவிரோதமாக வாங்கி வந்து போதைக்காக அவர் பயன்படுத்தியதோடு அந்த பகுதியைச் சேர்ந்த சிலருக்கு அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்தது.
சம்பவத்தன்று ஆள் அரவமற்ற இடத்தில் மகேஸ்வரன் போதை மாத்திரைகளைப் பயன்படுத்தும் போது, ஐந்து பேர் கொண்ட கஞ்சா கும்பல் ஒன்று அங்கு வந்துள்ளது. ஏற்கனவே, கஞ்சா போதையில் இருந்த அவர்கள் மகேஸ்வரனிடம் வலி நிவாரண மாத்திரையை கேட்டு மிரட்டி அவரது, வீட்டிற்கு அழைத்துச் சென்ற அந்த கும்பல் வீட்டின் முதல் மாடியில் மகேஸ்வரன் பயன்படுத்தும் அறையில் மறைத்து வைத்திருந்த வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக அள்ளிச்சென்றதோடு மகேஸ்வரனையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர்.
கஞ்சாவுடன், போதை மாத்திரைகளையும் பயன்படுத்திய கும்பல் போதை தலைக்கேறிய நிலையில் மகேஸ்வரனை கொலை செய்து பட்டினப்பாக்கம் முகத்துவாரத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. கொலை தொடர்பாக கார்த்திக், மணிகண்டன், விக்கி, தர்மாராஜ், சதீஷ் ஆகிய 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவான சூர்யாவை தேடி வருகின்றனர்.
போலீசாரின் எச்சரிக்கையை மீறி மொத்த விலையில் வலிநிவாரண மாத்திரைகளை சில மருந்தகங்கள் இதுபோன்ற கும்பலிடம் சப்ளை செய்து வருவதாகவும், இந்த மாத்திரைகளை பயன்படுத்தி விட்டு இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லும் போது காவல்துறையின் பிரீத் அனலைசர் வைத்து சோதனை செய்தாலும் அந்த சோதனையில் சிக்குவதில்லை என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர் மருத்துவரின் பரிந்துறை சீட்டு இல்லாத சட்டவிரோத மாத்திரை விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.