தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் முறைகேடாக மணல் அள்ளப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜரானார்.
தமிழகம் முழுவதும் மணல் அள்ளப்படும் விவகாரத்தில், கடந்த செப்டம்பர் மாதம் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு முத்தையாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
சம்மனை ஏற்றுக்கொண்ட அவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை 11 மணியவில் ஆஜரானார். மணல் குவாரிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் செயல்படும் 28 மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து அளிக்கப்பட்ட நெருக்கடியை அடுத்து, முத்தையா விரிவான வாக்குமூலம் அளித்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிர விசாரணையில், ஏராளமான போலி ரசீதுகள், போலி கியூ-ஆர் ஸ்கேனர்கள், மணல் குவாரியில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கைகள், இஸ்ரோ மூலம் பெறப்பட்ட அளவீடுகள், சுங்கச்சாவடிகளில் பதிவான லாரிகளின் ட்ரிப் பட்டியல் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முறைகேடான வகையில் மணல் அள்ளப்பட்டுவருவதாகவும், தனக்கும் இது குறித்த புகார்கள் வந்துள்ளதாகவும் கூறி அக்டோபர் மாதம், அவருக்கு கீழ் பணியாற்றும் நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். துறையில் இருக்கும் அழுக்குகளை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டதாக அவர் கூறியிருந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக கூறப்பட்டது.
நீர்வளத்துறை பொறியாளர்கள் அனுப்பிய பதில் கடிதத்தில், தாங்கள் வெறும் கருவிகள் தான், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தான் தவறுகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என கூறியிருப்பதாகவும், அதனால், 10க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்புவது குறித்த ஆலோசனையில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.