சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
திராவிடக் கொள்கை எதிர்ப்பு மாநாடு நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், எந்த மதத்திற்கும் எதிராக பேசுவதற்கு, நீதிமன்றம் அனுமதிக்காது எனத் தெரிவித்தார்.
மேலும், அதிகாரத்தில் உள்ளவர்கள், மக்களுக்குள் சாதி, மதம், மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும் என்றும் கூறினார்.
குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம் எனக்கூறிய அவர், அமைச்சர்களின் பேச்சால்தான் திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மனுத் தாக்கல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.