தருமபுரி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன 6 வயது சிறுவன் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டான்.
காட்டம்பட்டியைச் சேர்ந்த ஆதிமூலம் - சுதா தம்பதியினருக்கு மதியரசு உள்பட 2ஆண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி முதல் மதியரசு காணாமல் போனதை அடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது அவன் மதியரசுவை கொலை செய்து அருகே இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் போட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சிறுவன் உடலை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரகாசை கைது செய்த போலீசார் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.