திருச்சியில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட ஜவுளி வியாபாரியை புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
நாகமங்கலத்தை சேர்ந்த ராமராஜன் 24ஆம் தேதி உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி ஹேமலதா மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
சென்னையை சேர்ந்த கீர்த்தி என்பவரிடம் தொழில் செய்வதற்காக ராமராஜன் ஏழரை லட்சம் ரூபாய் பணம் பெற்று திருப்பி தராமல் இருந்தது தெரிய வந்ததையடுத்து, கீர்த்தி கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். ராமராஜனிடம் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்காக கீர்த்தி செங்கல்பட்டை சேர்ந்த நண்பர் முஸ்தபா என்பவரை அணுகியுள்ளார்.
இதையடுத்து ராமராஜனை கடத்த திட்டம் தீட்டிய முஸ்தபா, இதற்காகவே ஜார்கண்டிற்கு சென்று கள்ளத்துப்பாக்கி ஒன்றையும் வாங்கி வந்தாக கூறப்படுகிறது. மேலும், தனது நண்பர்களுடன் சேர்ந்து ராமராஜனை கடத்தி, பணம் கேட்டு மிரட்டி சேலம் அருகே வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் அவரை மீட்டு, கடத்திய ஆறுபேரையும் கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.