தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரை மிரட்டி 50 லட்ச ரூபாய் கேட்ட வழக்கில், சாட்சி விசாரணைக்காக வந்த சவுக்கு ஷங்கர், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2016-ம் ஆண்டு,செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி குறித்து சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாகவும், 50 லட்சம் பணம் கேட்டு அவரை மர்ம நபர் செல்போனில் மிரட்டியதாகவும், போலீசில் புகாரளிக்கப்பட்டது.
தனக்கு காவல்துறை மீது நம்பிக்கை இல்லாததாக கூறி மகாலட்சுமி தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையில், மகாலட்சுமியும், அவரது சகோதரர் சதிஷும் பணம் கேட்டு மிரட்டப்பட்ட புகாரில் நாடகமாடியது தெரிய வந்தது.
இதனையடுத்து இருவரையும் குற்றவாளிகளாக சேர்த்த சிபிஐ, சவுக்கு சங்கரை வழக்கின் சாட்சியாக சேர்த்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.