ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடில் குழந்தை இல்லை என்பதற்காக மனைவியை கொலை செய்து சடலத்தை மூட்டை கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் அரங்கேறி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்தவர் ராமு, இவரது மனைவி சரிதா. இருவரும் காதல் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் பெருமுகை பகுதியில் உள்ள தனியார் ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில் குழந்தை இன்மை காரணமாகவும் ராமுக்கு சரிதா நடத்தை மீது சந்தேகம் இருந்த காரணத்தாலும் அவ்வப்போது இருவரும் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி ராமு, ரத்தினகிரி காவல் நிலையத்திற்க்கு சென்று தனது மனைவி சரிதாவை சென்ற மாதம் 25 ஆம் தேதி முதல் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
அதன் பின்னர் ராமு கே.ஜி.எப் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே சரிதா காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்த ரத்தினகிரி போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில் ராமு வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் ரத்தினகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் ரத்தினகிரி போலீசார் ராமுவின் வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் அப்போது வீட்டின் உள்ளே மூடப்பட்ட நிலையில் இருந்த கிணற்றில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் இருப்பதைக் கண்ட காவல்துறையினர் ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் விரைந்த வந்த தீயனைப்பு துறையினர் கிணற்றில் உள்ள சடலத்தை மீட்டனர். மேலும் சடலத்தை ஆய்வு மேற்கொண்டபோது அது சரிதாவின் உடல் என்பது தெரியவந்தது. கைபற்றபட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து கே ஜி எஃப் பகுதியில் இருந்த ராமுவுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்த போலீசார் ராமுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி நள்ளிரவில் சரிதா வேறு ஒரு நபரிடம் செல்போன் வாயிலாக பேசிக் கொண்டிருந்ததாகவும் இது குறித்து கேட்டபோது எழுந்த சண்டை காரணமாக சரிதாவை தலையணை வைத்து அமுக்கி கொலை செய்து போர்வையில் சுற்றி மூட்டையாக கட்டி வீட்டின் உள்ளே இருந்த கிணற்றில் வீசியதாகவும் மேலும் சடலத்தை அப்புறப்படுத்த முயற்சித்ததாகவும் ஆனால் தன்னால் முடியாத காரணத்தினால் கடந்த ஒன்றாம் தேதி மனைவி மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு கே ஜி எஃப் சென்று விட்டதாக கொலை குறித்து ராமு ஒப்புக்கொண்டார்.இதனை அடுத்து ராமுவை கைது செய்த போலீசார் அவனை சிறையில் அடைத்தனர்
குழந்தை இன்மை காரணமாகவும் மனைவி நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவும் காதல் மனைவியை கொன்று மூட்டையாக கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.