வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வருகிற 5,6ஆகிய தேதிகளில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ள வானிலை மையம், இடி, மின்னல் சமயத்தில் தரைக்காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வரையில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் பகல்நேர வெப்பநிலை அதிகபட்சமாக இயல்பை விட 2 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. இதனிடையே, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது எனக் கூறியுள்ள வானிலை மையம், இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறும் என தெரிவித்துள்ளது.