மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்று கொண்ட விவகாரம் தொடர்பாக டீன் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அந்த கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அப்போது, மாணவர்கள் எடுத்த உறுதிமொழியில், சமஸ்கிருத வாக்கியங்கள் அடங்கியிருந்ததாக சர்ச்சை எழுந்தது.
தேசிய மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் இருந்து உறுதிமொழி படிவம் பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும், தன்னிடமும், பேராசிரியரிகளிடம் அதனை காட்டாமல் மாணவர் சங்க தலைவரே வாசித்துவிட்டதாகவும் கல்லூரி முதல்வர் விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில், கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது குறித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கையில் hippocratic உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் உறுதி மொழி எடுத்தது கண்டிக்கத்தக்கது எனவும், இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.