கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மது போதையில் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டது குறித்து தட்டிக் கேட்டவர்களை இளைஞர்கள் சிலர் தாக்கிய நிலையில், ஊர் மக்கள் ஒன்றுகூடி அவர்களை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
முத்துநகர் கிராமத்தில் அருண், வெங்கடேசன் என இரண்டு இளைஞர்கள் ஒரே வீட்டில் தங்கி கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர். சனிக்கிழமை மாலை மது போதையில் இருந்த இருவரும் எதிர்வீட்டைச் சேர்ந்த பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர்.
அவர்களை பெண்ணின் கணவர் தட்டிக் கேட்கவே, இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மிரட்டவே, கூட்டாளிகளை போன் செய்து வரவழைத்துள்ளனர்.
6 இரு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு ஆட்டோக்களில் ஆயுதங்களுடன் வந்த 20க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல், சிலரைத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து ஊர் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி இளைஞர் கூட்டத்தை விரட்டி விரட்டி அடிக்கத் தொடங்கினர். 20 பேரில் 10 பேர் அடி தாங்காமல் தப்பி ஓடி விட, பொதுமக்களிடம் சிக்கிய 10 பேர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.