சென்னை மாநகராட்சியில் 134 வது வார்ட்டில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ள ஒரே வேட்பாளரான உமா ஆனந்தன், சிங்கம் சிங்கிளாக தான் வரும் என்று பஞ்ச டயலாக் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். காலையில் 8 ஓட்டு வாங்கியதாக கேலி பேசியவர்களுக்கு பதில் அடி கொடுத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை பெருநகர மாநகராட்சிகுட்பட்ட 134 வது வார்டில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் உமா ஆனந்தன் என்பவர் தேர்தலில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை தொடங்கி நிலையில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் அவருக்கு 8 வாக்குகள் கிடைத்திருந்தது. இந்த விவரம் தெரியாமல் அவரை கேலி செய்வதாக நினைத்து எதிர் கட்சியினர் சமூக வலைதளத்தில் அவரை கடுமையாக கேலி செய்து கருத்து பதிவிட்டு வந்தனர்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி வெற்றிவாகை சூடிய உமா ஆனந்தன், சென்னை மாநகராட்சிக்குள் நுழையும் பாரதிய ஜனதாவின்ஒரே ஒரு மாமன்ற உறுப்பினர் என்ற தகுதியை பெற்றதோடு தன்னை கேலி செய்தவர்களுக்கு தனது வெற்றியின் மூலம் தக்க பதில் அடி கொடுத்தார்.
செய்தியாளர்களை சந்தித்த உமா ஆனந்தனிடம், 140 திமுகவினர் வெற்றி பெற்றுள்ள நிலையில் பா.ஜ.க ஒரு இடத்தில் தானே வென்றுள்ளது என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார், அதற்கு ஆரம்பத்தில் வாஜ்பாய், அத்வானி என்று ஒவ்வொருவராகத்தானே ஜெயித்தோம் என்று கூறிய அவர் சிங்கம் ஒத்தயிலதான் வரும் என்று கூறி கேள்வி எழுப்பிய செய்தியாளரை திகைக்க வைத்தார்