தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் பள்ளி விடுதியில் அரியலூரைச் சேர்ந்த மாணவி கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இதற்கிடையே, இந்த உத்தரவினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இதன் விசாரணையில், உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் இதனை தமிழ்நாடு அரசு கவுரவ பிரச்னையாக கருதக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.