தமிழக காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடந்த கோவை நேரு விளையாட்டு அரங்கின் கழிவறையில் ஊக்க மருந்து செலுத்திய ஊசி மருந்துகள் , சிரிஞ்சுகள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் பிரசித்தி பெற்ற விளையாட்டு திடல் நேரு ஸ்டேடியம் ஆகும். இங்கு மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இங்கு காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான 61 வது விளையாட்டு போட்டிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிலையில் விளையாட்டு போட்டி நடந்த நேரு விளையாட்டு அரங்கின் கழிவறைகளில் இருந்து ஊக்க மருந்து செலுத்தியதற்கான சிரிஞ்சு மற்றும் காலி மருந்து புட்டிகள் ஆங்காங்கே கைப்பற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கழிவறைகளில் கைப்பற்றப்பட்ட ஊக்க மருந்து புட்டிகள் மற்றும் சிரிஞ்சிகளில் இடம் பெற்றிருந்த காலாவதி தேதியை வைத்து அனைத்தும் அண்மையில் பயன்படுத்த பட்டவை போல இருப்பதாக தகவல் வெளியானது.
இங்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம் என்றாலும் அண்மையில் காவல்துறையினருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டதால் அதில் பங்கேற்ற காவலர்கள் இதனை பயன்படுத்தி விட்டு வீசி சென்றனரா? அல்லது வேறு விளையாட்டு வீரர்கள் யாராவது இந்த ஊக்கமருந்து மற்றும் சிரிஞ்சுகளை இங்கு வீசிச்சென்றனரா? என்பது தெரியவில்லை என்று விளையாட்டு அரங்கம் நிர்வாகத்தினர் சார்பில் தெரிக்கப்பட்டது.
மேலும் உடலையும், உள்ளத்தையும் ஒரு முகப்படுத்தி ஊக்கத்துடன் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப்பெறும் வீரர்களுக்கு மத்தியில் , ஊக்க மருந்தை பயன்படுத்திய அந்த கருப்பு ஆடுகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டரங்கத்திற்குள் ஊக்கமருந்து எப்படி உள்ளே வந்தது , அதனை பயன் படுத்தியவர்கள் யார் என்பதும் குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் விளையாட்டு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.