முதுகுளத்தூர் அருகே, கல்லூரி மாணவன் மணிகண்டன் போலீசார் தாக்கியதால் பலியானதாக குற்றஞ்சாட்டிய அவரது குடும்பத்தினரைச் சந்தித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆறுதல் கூறினார். அப்போது அவர் வழங்கிய பணத்தை வாங்க மறுத்த குடும்பத்தினர் அரசு வேலை வேண்டும் என்று கோரிக்கை வைத்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மணிகண்டன் கீழத்தூவல் போலீசார் விசாரணைக்குப் பின் மர்மமாக உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் மணிகண்டன் பலியானதாக அவரது குடும்பத்தினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நீர்கோழியேந்தால் கிராமத்தில் மணிகண்டன் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோரிடம் ஆறுதல் கூறினார்.
தங்கள மகனின் உயிரிழப்புக்கு நீதி வேண்டும் என்று கேட்டு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்த நிலையில் அவர்களுக்கு நிதி வழங்கிய போது அதனை மணிகண்டனின் தந்தை கையில் பெற்றுக் கொண்டாலும் உறவினர்கள் அதனை ஏற்க மறுத்து திருப்பி கொடுத்ததோடு, தங்களுக்கு பணம் வேண்டாம், அரசு வேலை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்
அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற நிலையில், அவரது ஆதரவாளர்கள் பணத்தை வீட்டின் வாசலில் வைத்து விட்டுச் சென்றதாக கூறிய மணிகண்டன் குடும்பத்தினர், மணிகண்டனின் மரணத்துக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை அவர்கள் வைத்துச்சென்ற பணத்தை எடுக்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டனர்