மதுரையில் வைகை ஆற்றின் மணல் மேட்டில் நாய் ஒன்று அதன் குட்டியுடன் சிக்கித்தவித்த நிலையில், அந்த குட்டியை தீயணைப்பு வீரர்கள் ஆற்று வெள்ளத்தில் இறங்கி போராடி மீட்டனர்.
ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் அருகில் ஆற்றில் அதிகமாக தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் கரை செல்ல முடியாமல் தாய் நாயும் அதன் குட்டியும் மணல் மேட்டில் மாட்டிக்கொண்டன. இதனை பார்த்த பொது மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். பாலத்தில் இருந்து கயிறு கட்டி நாய்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் முயற்சித்தபோது, அவர்களை கண்டு பயந்த தாய் நாய், குட்டியை விட்டு விட்டு ஓடியது.
இதனையடுத்து குட்டியை பத்திரமாக மீட்ட வீரர்கள், தூரமாக இருந்த தாய் நாயிடம் அதை காட்டி அருகில் வரவழைக்க முயற்சி செய்தனர். குட்டியை கண்ட அந்த தாய் நாய், பெருக்கெடுத்து ஓடும் ஆற்று நீரில் குதித்து நீந்தி தன் குட்டியை நோக்கி வந்தது.