ஆட்சேபனை இல்லை என்பதற்காக, அரசு நிலங்களை ஆக்கிரமிக்க அனுமதிக்கலாமா?, என உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூர் கிராமத்தில், மயானப் பாதை மற்றும், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, வழிபாட்டுத்தலம் கட்டப்பட்டுள்ளதாக, முருகேசன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் தாக்கல் செய்த பதில் மனுவில், வழிபாட்டுத்தலம் கட்ட, எந்த எதிர்ப்பும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வழிபாட்டுத்தலம் கட்டியவருக்கு ஆதரவாக, தாசில்தார் பதில் தாக்கல் செய்துள்ளதாக, கண்டனம் தெரிவித்த நீதிபதி, தாசில்தார் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வழிபாட்டுத்தலம், எந்த அனுமதியும் இன்றி கட்டப்பட்டுள்ளதால், அதை 4 வாரங்களில் இடிக்கவும், நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.