நீலகிரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக சிக்காத புலிக்கு நேற்று மயக்க ஊசி செலுத்தப்பட்டிருப்பதால் புலி விரைவில் உயிருடன் சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மசினகுடி , கூடலூர் பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், நான்கு மனிதர்களையும் கடித்துக் கொன்ற T23 புலியை வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழுவுடன் 20 நாட்களாக தேடி வந்தனர்.
இந் நிலையில் இரவு மசினகுடி - முதுமலை சாலையில் புலி நடந்து சென்றபோது கால்நடை மருத்துவக் குழு நான்கு முறை மயக்க ஊசியை செலுத்தியது .இரண்டு ஊசிகள் T23 உடம்பில் செலுத்தப்பட்ட நிலையில் வனப்பகுதிக்குள் மயக்க நிலையில் புலி தப்பி ஓடியது.
மயக்கநிலையில் வனப்பகுதிக்குள் தப்பிச்சென்ற புலியை நூற்றுக்கு மேற்பட்ட வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் தேடி வருகின்றனர்.