திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாடி பல லட்ச ரூபாய் பணத்தை இழந்த பட்டதாரி இளைஞர், பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புருஷோத்தம குப்பம் காட்டுகொல்லை பகுதியை சேர்ந்த எம்.இ. பட்டதாரியான ஆனந்தன், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான ஆனந்தன் தான் சம்பாதித்த பணம் முழுவதையும் ரம்மியால் இழந்த நிலையில், உறவினர்கள் மற்றும் வேலை செய்யும் இடத்திலும் சக நண்பர்களிடம் சுமார் 10 லட்ச ரூபாய் வரை கடன் பெற்று அதனையும் இழந்துள்ளார்.
இதனையறிந்த பெற்றோர் அவரை கண்டித்த நிலையில், இதனால் குடும்பத்தினருடன் பேசுவதை நிறுத்திய ஆனந்தன், வீட்டிற்கு வருவதையும் தவிர்த்துள்ளார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் வந்த ஆனந்தன் வீட்டில் இருந்த பணத்தை எடுத்து ஆன்லைன் ரம்மியில் இழந்ததாக கூறப்படுகிறது.
இதனை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த ஆனந்தன் நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.