நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கடந்த ஏழு நாட்களாக அட்டகாசம் செய்துவரும் ஆட்கொல்லிப் புலியை பிடிக்க 75-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஒருபுறம் முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை கொன்று தின்றுள்ளது.
அந்த புலி, கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் மற்றும் முதுமலை வெளிவட்டச் சாலையில் அமைந்துள்ள மசினகுடி கிராமத்தில் ஏற்கெனவே 3 பேரை கொன்று மனித ரத்த ருசி பார்த்துள்ளது. கடந்த ஏழு நாட்களில், 20க்கும் மேற்பட்ட கால்நடைகளை கொன்று தின்றுள்ளது.
அட்டகாசம் செய்து வரும் அந்த ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த, பயிற்சிபெற்ற சுமார் 75-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்றுள்ளது. இதையடுத்து புலியைப் பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கூறி, தமிழகம், கேரளா, கர்நாடகாவை இணைக்கும் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.