மரக்காணம் வன்முறையில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு பெறுவது குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி பா.ம.க.வுக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
2013ஆம் ஆண்டு நடந்த வன்முறை, அதைத் தொடர்ந்து பாமகவினர் நடத்திய போராட்டங்களில் அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு பெறுவது குறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணிக்கு வருவாய் நிர்வாக ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதி, அரசின் நோட்டீசுக்குப் பாமக தரப்பில் உரிய விளக்கம் அளிக்கவும், விசாரணையை 4 மாதத்தில் முடிக்க அரசுக்கும் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு பொதுச்சொத்துக்கள் சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டார்.