அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே உருவானது. இது அடுத்த 28 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 15,16 ஆகிய தேதிகளில் புயலாக உருமாறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடல், குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் பெரும்பாலும் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 4 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
புயல் உருவாவதின் எதிரொலியாக, நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். நாளைய தினம் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
15-ம் தேதி நிலவரப்படி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் இடி மின்னல், சூறை காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 16-ம் தேதி மிக கனமழையும், 17-ம் தேதி கனமழையும் பெய்யக்கூடும்.
இதனிடையே வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூரில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரு நாட்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கபட்டுள்ளது.