நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக டிராக்டர் உரிமையாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யம் அடுத்த கத்தரிபுலம் பகுதியில் அனுமதி இல்லாமல் கலவை மணலை சிலர் எடுத்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் கத்தரிபுலம் பகுதியில் தனிப்படையை சேர்ந்த டீன் மற்றும் வெற்றிவேல் என்பவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது கலவை மணலை ஏற்றி கொண்டு டிராக்டர் ஒன்று வந்துள்ளது.
அதனை வழிமறித்த தனிப்படை போலீசார் மணல் எடுத்து செல்வது குறித்தும் அனுதி பெறப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது ஓட்டுநர் வீரமணி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
பின்னர் மணல் நிரப்பப்பட்ட டிராக்டரை அருகில் உள்ள கரியாப்பட்டினம் காவல்நிலையத்திற்கு எடுத்து வர எண்ணிய தனிப்படை காவலர் டீன் டிராக்டரை ஓட்ட, அவருடன் சக போலீசார் வெற்றிவேல் அமர்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் காவல்நிலையம் நோக்கி டிராக்டர் சென்று கொண்டிருந்த போது சாலையில் திடீரென வழிமறித்து நின்ற மூன்று பேர் தங்கள் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை காவலர்கள் மீது தூக்கி வீசினர்.
பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதில் காவலர் டீனுக்கு கை மற்றும் கால் பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. உடனிருந்த வெற்றிவேலுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இருவருக்கும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் மணல் எடுத்து செல்லப்பட்ட டிராக்டர் கரியாப்பட்டினத்தை சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமானது என்றும், அவர் திருட்டுத்தனமாக மணலை கடத்தி விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
பின்னர், ஓட்டுநர் வீரமணியை கைது செய்த போலீசார், டிராக்டர் உரிமையாளர் சக்தி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.