திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கணவனோடு சேர்ந்து ஆண் நண்பரைக் கொன்று பஞ்சு மெத்தையில் உடலை சுற்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற பெண் கைது செய்யப்பட்டார்.
திருவெள்ளைவாயில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் முன்பக்கம் மூட்டை ஒன்றை வைத்துக் கொண்டு வந்த ஒரு தம்பதியை தடுத்து நிறுத்தி விசாரிக்க முயன்றனர். போலீசாரைப் பார்த்ததும் வேகமாக வாகனத்தை இயக்கியவர்களை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தபோது, அது பஞ்சுமெத்தை என்பதும் அதற்குள் ரத்த வெள்ளத்தில் ஆணின் சடலம் ஒன்று இருப்பதும் தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் வடமாநிலத் தம்பதி என்பதும், கொலையுண்டு கிடந்த நபர், அந்தப் பெண்ணோடு தவறான தொடர்பில் இருந்த மற்றொரு வடமாநில நபர் என்பதும் தெரியவந்தது.
தன்னோடு தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து வைத்து அந்த நபர் மிரட்டவே, அதைக் கணவனிடத்தில் கூறியிருக்கிறார் அந்தப் பெண். அதனையடுத்து இருவரும் சேர்ந்து அவனை கொலை செய்து, இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று ரயில் தண்டவாளத்தில் வீச திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.