கோவையில் அடகு வைக்கப்பட்ட தாலியை மீட்டு தராத கணவரை காய் வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கோவை வெரைட்டி ஹால் அருகேயுள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் பிராங்ளின் பிரிட்டோ. தற்போது, 35 வயதான இவர் பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் கரோலின் (31)என்பவருடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் பிராங்ளின் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அதோடு, தன் மனைவியின் தாலிச் செயினை பிராங்ளின் அடகு வைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக , இன்று கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அடகு வைத்த நகையை மீட்டு தர வேண்டுமென்று கரோலின் கணவரிடத்தில் சண்டை போட்டுள்ளார். அப்போது, ஏற்பட்ட தகராறில் கணவர் பிராங்ளினை மனைவி கத்தியால் குத்தி கொலை செய்தார்.
பிறகு, காய்கறி வெட்டும் போது, கத்தி தெரியாமல் பட்டு விட்டதாக பிராங்ளினை கரோலின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், ஏற்கெனவே பிராங்ளின் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில் கரோலின் கோபத்தில் கணவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது.
மேலும், போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து, காய்கறி வெட்டும் போது, தெரியாமல் தன் கணவர் மீது தெரியாமல் கத்தி பட்டு விட்டதாக கரோலின் நாடகமாடியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வெரைட்டி ஹால் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.