தேசிய கொடியை அவமதிக்கும் வகையிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து நீதிமன்றத்தில் எஸ்.வி சேகர் தாக்கல் செய்த உத்தரவாத மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தப்பட்டது மற்றும் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டது தொடர்பான விவகாரத்தில் எஸ்வி சேகர் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை ஏற்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், முன் ஜாமீன்கோரி எஸ்வி சேகர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையை 14ம் தேதிக்கு ஒத்திவைத்தும், அதுவரை அவரை கைது செய்வதற்கான இடைக்கால தடையை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.